Tuesday, May 22, 2012

யாழ்ப்பாணம்


பதிவை வாசிக்க வந்திருக்கும் உள்ளங்களுக்கு வணக்கமும் நன்றியும்.
எனது சொந்த வலைப்பூவில் முதலாவது பதிவாக யாழ்ப்பாணம் இருந்தபோதிலும் உண்மையில் இது என்னுடைய இரண்டாவது பதிவாகும்.இதற்கு முன்னர் நட்பு வட்டாரத்திற்கான     
sweetsweetygroup.blogspot.com ல் 21.02.2012 அன்று 'உயிர் மூச்சின் இறுதி நிமிடங்களிலும் இனிக்கும் தருணங்கள்' எனும் தலைப்பில் தூக்கத்துடனும் அடிக்கடி தொடர்பு விட்டுப்போகும் இணையத்துடனும் போராடி எழுதிய பதிவே என்னுடைய முதலாவது பதிவாகும்..அப்பதிவிற்கான இணைப்பு இதோ

'நண்பன்' விஜய் பாணியில் எளிமையாக சொல்வதானால் இது என்னுடைய இரண்டாவது பதிவு என்பதால் தவறுகளிருந்தால் பொறுத்துக்கொள்ளும்படியும் திருத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளை சுட்டிக்காட்டும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணம்

என்றென்றும் என்னால் விரும்பக் கூடிய பதிவாக இருக்கவேன்டும் என்பதற்காக  யாழ்ப்பாணம் பற்றி இப்பதிவை இடுகிறேன்.யாழ்மண்ணை நேசிக்கும் ஒருவரால் தாய்க்கு நிகரான தாய்மண் பற்றி ஒரு பதிவு என்ன ஓராயிரம் பதிவு எழுதலாம்.

பரந்து விரிந்த இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமையப்பெற்ற, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவின் வடபகுதியில் அமைந்துள்ளது யாழ்ப்பாணம்.மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணக்குடாநாடு எனவும்,சுருக்கமாக யாழ் எனவும் அறியப்படுகிறது.
இலங்கையை ஒரு மனித உடலோடு ஒப்பிட்டால் மிக முக்கியமான பகுதியான தலைப்பகுதியில் யாழ்ப்பாணம் உள்ளது.



இனிமையாக யாழ் மீட்டிய இசைக் கலைஞனுக்கு மன்னன் பரிசளித்த மணல் திட்டுக்களே யாழ்ப்பாணம் என்பது ஐதீகம். யாழ் வரலரற்றை  18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அறிவு,வீரம்,கலை, கலாசாரம், விருந்தோம்பல் என மக்களின் தனித்தன்மையால்  சர்வதேச அளவில் அறியப்பட்ட இடமிது.
சோழக்கொடி ஏந்தி புறநானூறு படைத்த யாழ் மண்ணிற்கு தமிழர் தம் வரலாற்றில் தனித்துவமான இடம் என்றுமேயுண்டு.
கனடாவின் ரொறன்ரோ நகரம் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுவதனூடாக புலம்பெயர்ந்த யாழ்மக்களின் செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம்...அட அவ்வளவு எதுக்குங்க?சிவாஜி படத்தில் ரஜினிக்கு பெண் தேடி சின்னக்கலைவாணர் யாழ்ப்பாணம் புறப்பட்ட கதை தெரியும் தானே?? (கொழும்பு வரை வந்து விட்டு இலங்கை அரசின் பாதுகாப்புக் கெடுபிடிகளால் வந்தவழியே திரும்பி விட்டார் என்பது அவருக்கும் இலங்கை அரசிற்கும் மட்டுமே தெரிந்த மெய்)

அறிமுகம் போதும்...இனி யாழ்ப்பாணத்திற்குள் காலடி
எடுத்துவைப்போம்....யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி இலங்கையின் எந்த பாகத்திற்கும் முக்கியமாக தமிழர் பிரதேசங்களுக்கு தடை இல்லாமல் சென்று வர உங்கள் கையில் ஒன்று கட்டாயம் வேண்டும்.நிச்சயமாக பணத்தை நான் குறிப்பிடவில்லை..அது தான்...அதே தான்.. உள்நாட்டவர் என்றால் அடையாள அட்டை,வெளிநாட்டவர் என்றால் கடவுச்சீட்டு. (இலங்கையின் பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் விதிவிலக்கு)



A9 எனப்படும் யாழ்-கண்டி வீதியூடாக தரைமார்க்கமாகவும்,கடல் வழி மூலமாக காங்கேசன் துறை ஊடாகவும் விமானம் மூலம் பலாலி விமானத்தளத்தை வந்தடைவதன் மூலமும் யாழ்ப்பாணத்திற்குள் நுழையலாம். 1990களில் நிறுத்தப்பட்ட புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது....

இனி யாழ்ப்பாணத்தின்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம்..

யாழ் நூலகம்
கல்வியே நிலையான செல்வம் என்ற வலுவான கருத்தைக் கொண்ட யாழ் மக்களின் அரிய சொத்தாக, 1981ம் ஆண்டு சிங்கள காடையர்களால் எரிக்கப்படும் வரை கிடைத்தற்கரிய ஒரு இலட்சம் புத்தகங்களுடன் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்தது இந்நூலகம்.

சுப்பிரமணியம் பூங்கா
யாழ் நூலகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் இப்பூங்கா குளிர்மை தரும் பல மரங்களைக் கொண்டதாகவும், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பகுதி கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது.அடடா சொல்ல மறந்து விட்டேனே...காதலர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.



யாழ் கோட்டை
போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டதும், பின்னர் ஒல்லாந்தரால் மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டதும்,இலங்கையின் இரண்டாவது பெரிய கோட்டையுமாக யாழ் கோட்டை அமைந்துள்ளது.இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இக்கோட்டையை  பொதுமக்கள் பார்வையிட தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.





 நல்லூர் முருகன் கோவில்
ஆகம முறைப்படி அல்லாமல் அமைந்த,இந்துக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்று. இங்கு அருள்பாலிக்கும் கந்தன் அலங்கார கந்தன் என பக்தர்களால் அழைக்கப்படுகிறான்.பிற ஆலயங்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் ஒன்று இவ்வாலயத்தில் உண்டு. எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாத நேர ஒழுங்கு (punctuality)இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.உரியநேரத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் பூஜைமற்றும் ஏனைய வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. 25நாட்கள் நடைபெறும் இக்கோயில் திருவிழாவிற்கு இலங்கையின் ஏனையபாகங்களிலிருந்தும்,வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் வருகை தருகிறார்கள்.

சங்கிலியன் அரண்மனை
சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.இம் மன்னன் வசித்த  அரண்மனையின் முகப்பு மட்டுமே தற்போது நல்லூரில் எஞ்சியிருக்கின்றது.போர்த்துக்கேய ஒல்லாந்த படையெடுப்புக்களாலும்,யுத்தத்தாலும்,முறையான பராமரிப்பின்மையாலும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.


மந்திரி மனை
சங்கிலிய மன்னனின் மந்திரி வாழ்ந்த மனை எனபதால் மந்திரி மனை என்றே அழைக்கப்படுகிறது..அரியாலையில் அமைந்திருக்கும் இம் மனை சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடமாக காணப்படுகிறது.

நிலாவரைக்கிணறு
இராச வீதி நவக்கிரியில் அமைந்துள்ள இக்கிணற்றின் ஆழம் இதுவரை அறியப்படவில்லை. நிலா வரையான தூரத்தினை ஆழமாகக் கொண்ட கிணறு என்ற பொருளில் 'நிலாவரைக் கிணறு' என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இராமன் தாகத்தின் கொடுமையால் தன்னுடைய அம்பினால் நிலத்தில் குத்தியபோது நீர் ஆனது முடிவில்லாமல் சீறிப்பாய்ந்ததாக கூறப்படுகின்றது

மாருதப்புரவல்லி குதிரை முகம் நீங்கப்பெற்ற மாவிட்டபுரம் கோவில்,பொன்னியின் செல்வனில் பூங்குழலி படகுவிட்ட தொண்டமனாற்றுச் செல்வச்சந்நதி ஆலயம்,மணற்காடு, சாட்டிகடற்கரை, நல்லூர்அருங்காட்சியகம் இப்படி யாழ் மண்ணில் ரசித்து வசிக்க இடம் கோடி உண்டு. யாழ் சாரலின் துளிகளில் யாழ்ப்பாண பயணம் தொடரும்...

மறுபிறவி உண்டென்றால்
மறுபடியும் யாழில் பிறக்கவேண்டும்....
இறந்த பின்னும் இம்மண்ணோடு
மண்ணாய்க் கலக்கவேண்டும்..
    
யாழின்சாரல் சாருகா
    

1 comment: