Monday, December 31, 2012

விடைபெறும் 2012

இப்பொழுது தான் பிறந்தது போல இருந்த 2012 ம் வருடத்தின் இறுதி நிமிடத்துளிகளில் நான் ....




2012... இந்த ஆண்டு நினைவு வரும் போதெல்லாம் எவை எவை நினைவு வரும் என நினைத்துப்பார்க்கிறேன்....

1.வலைப்பூக்கள் வாசகியானது 2012 இல் ....

2.பதிவு என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்தது 2012 இல் ....

3. நட்புக்களுடன் மறக்கமுடியாத  ஒரு வார சுற்றுப்  பயணம் 2012 இல் ....

4.அதிகளவில் அடக்குமுறைகள்  பலவற்றை கண்டதும் உணர்ந்ததும்  2012 இல்...

 5.சிலரின் பழைய பொய்கள் சிலவற்றை வெளிப்படுத்தி பல உண்மைகளை உணர வைத்ததும்  இதே  2012....

இவற்றுடன் அதிகளவில் வெட்டிப்  பொழுது போக்கியதும்   2012 இல் தான்  ....

எப்படியான போதிலும் கடந்து செல்லும் 2012  கற்றுத் தந்த  பாடங்களோடு  மலரும் 2013 ஐ  வரவேற்க  காத்திருக்கிறேன்....

Tuesday, July 24, 2012

நல்லூர் கந்தசுவாமி கோயில் நிகழ்ந்ததும் நிகழ்வதும்


இன்று நல்லூர்க் கொடியேற்றம்.எனவே நல்லூர்க்கோயில் தொடர்பான பதிவாக நிகழ்ந்ததும் நிகழ்வதும்

செங்கை ஆழியான் என அறியப்படும் கந்தையா குணராசாவின் நல்லைநகர் நூல் என்ற வரலாற்று ஆய்வு நூலிலிருந்து சில தகவல்கள் நிகழ்ந்தது என்பதன் கீழும்,
திருவிழாவுடன் சம்பந்தமான சில நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தமிழ் கலந்து நிகழ்வதும் என்பதன் கீழும் என ஒரே பதிவில் ஒரு வேறுபட்ட முயற்சி.....



நிகழ்ந்தது

கி.பி 948 ம் ஆண்டு - புவனேகபாகு என்ற சோழப்பிரதிநிதி அல்லது அமைச்;சரால் இப்போது நல்லூர் ஆலயம் அமைந்திருக்கும் குருக்கள் வளவு என்ற இடத்தில் முதன்முதலாக கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டது.

கி.பி 1450 ம் ஆண்;டு – கனகசூரியசிங்கையரியன் வடவிலங்கையை ஆண்ட வேளையில் தென்னிலங்கையில் கோட்டை அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு விளங்கினான்.கி.பி 1450ம் ஆண்டு தனது வளர்ப்பு மகனான சப்புமல்குமாரய (செண்பகப்பெருமாள் ) என்பவனைப் பெரும் படையுடன் அனுப்பி வடபகுதியை கைப்பற்றிக்கொண்டான். இந்தப்படையெடுப்பின் போது தலைநகராக விளங்கிய நல்லூரிலிருந்த கந்தசுவாமி கோயில் உட்பட அனைத்து மாடமாளிகைகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

கி.பி 1450 தொடக்கம் கி.பி 1467 வரை யாழ்ப்பாண இராச்சியத்தை சிறீ சங்கபோதி புவனேகபாகு என்ற பெயரில் ஆண்ட சப்புமல்குமாரய மீண்டும் யாழ் நகரை மீள நிர்மாணித்ததுடன் குருக்கள் வளவிலிருந்து அழிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் அமைக்காது அரண்மனை மற்றும் அரசமாளிகைகள் அமைந்திருந்த பண்டாரவளவுக்கு அருகில் கோயில் கட்டுவதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது..அவ்விடம் முத்திரைச்சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.அவ்விடத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் இரண்டாவது தடவையாக  ஆகம விதிப்படி  சுற்றிலும் நெடு மதில்களுடன் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயிலாக அமைக்கப்பட்டது.

கி.பி 1478ல் கனகசூரியசிங்கையரியனின் மூத்த மகன் சிங்கைப் பரராசசேகரன் என்ற சிம்மாசனப்பெயரோடு அரசனானான்.சட்டநாதர் கோயில், வீரமாகாளி அம்மன் கோயில் போன்ற கோயில்களை அமைத்ததுடன் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் ஏரி ஒன்றையும் அமைப்பித்து அதற்கு யமுனா நதியின் தீர்த்தத்தை கொணர்வித்து யமுனா ஏரி என்ற பெயரையும் சூட்டினான். நல்லூரில் தமிழ்ச்சங்கம் நிறுவியதும் பரராசசேகரனே...பரராசசேகரம் என்ற வைத்திய நூலும் செகராசசேகரம் என்ற சோதிடநூலும் இவனது காலத்திலேயே இயற்றறப்பட்டது...

கி.பி 1591 ல் 3 வது தடவையாக போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்தபோது தமிழர்படையும், பறங்கியர்படையும் தற்போதைய ஆலயம் அமைந்துள்ள குருக்கள்வளவில் ஒன்றையொன்று எதிர்கொண்டன.அப்போதைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் குருக்கள்வளவில் குடியேறிஇருந்தனர். பறங்கியர்படைக்கும் தமிழருக்கும் நிகழ்ந்த சண்டையில் சிக்கந்தர் எனப்பெயர் கொண்ட சைவர்களாலும் முஸ்லீம்களாலும் மதிக்கப்பெற்ற அச் சர்வமத யோகியார் உயிரிழக்க நேர்ந்தது.யோகியாருக்கான சமாதி ஒன்று முஸ்லீம்களால்  குருக்கள்வளவில் அமைக்கப்பட்டது.

கி.பி 1621.2.2 குருக்கள் வளவில் இருந்த ஆலயம் அழிக்கப்பட்ட பின் சிறீசங்கபோதியால் அமைக்கப்பட்ட ஆலயமும் ஒன்றரை நூற்றாண்டுகளின் பின் பிலிப் டி ஒலிவேறா என்ற போர்த்துக்கேயத்தளபதியால் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு அவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்டது.

கி.பி 1658ம் ஆண்டு யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமாகியது. ஒல்லாந்தர் தமது ஆட்சியின் இறுதிக்காலத்தில் மதரீதியான கடும்போக்கை குறைத்துக்கொண்டனர்.

கி.பி 1734ம் ஆண்டளவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்ட முன்பு கந்தன் கோயிலிருந்த அதே வளவில் கிருஷ்ணையர் சுப்பையர் என்ற பிராமனரால் கந்தமடாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வேல் ஒன்றினை வைத்து கந்தபுராணமும் படிக்கப்பட்டு வந்தது.இது மூன்றாவது தடவையாக அமைக்கப்பட்ட கோயிலாகும்...
பறங்கியரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீள அமைக்கவென நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகச் சந்ததியினரான கிருஷ்ணையர் சுப்பையர் விண்ணப்பித்தபோது  ஒல்லாந்த ஆட்சியாளர்கள் முதல் கோயிலிருந்த குருக்கள் வளவிலேயே ஆலயம் அமைக்க அனுமதி வழங்கினர்.இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஒன்று தேவாலய வளவிலிருந்த கந்தமடாலயத்தை அகற்றுவது, மற்றையது தமது வர்த்தகத்திற்குப்போட்டியாக இருந்த முஸ்லீம்களை குருக்கள் வளவிலிருந்து அகற்றுவது...


கி.பி 1749 ம் ஆண்டு முதன்முதலாக கந்தன்ஆலயம் அமைக்கப்பட்ட அதே இடமான குருக்கள் வளவில் கிருஷ்ணையர் சுப்பையரினதும், தொன்யுவான் மாப்பாணர் என்பவரினதும் முயற்சியால் நான்காவது தடவையாக கோயில் அமைக்கப்பட்டது.காலத்திற்கு காலம் செய்யப்பட்ட மாற்றங்களைச் சுமந்த வண்ணம் நல்லூரில் இப்போதிருக்கும்; கோயில் கி.பி 1749ம் ஆண்டளவில் அமைக்கப்பட்டதே.....

நிகழ்வது

திருவிழா எண்டால் அது  நல்லூரில நடக்குறது தான்...கோயில் திருவிழாவையும் தாண்டி இன்னும் நிறைய திருவிழா  இங்க கொடியேறும்..



யாழ்ப்பாணத்தில இருக்கிற அம்மாவோ அப்பாவோ வெளிநாட்டில இருக்கிற பிள்ளையளுக்கு திருவிழாவைப் பத்தி மூண்டு மாசத்துக்கு முன்னால இருந்தே போன் அல்லது ஸ்கைப் மூலம் ஞாபகப்படுத்த தொடங்கி விடுவினம்....நல்லூரில கொடியேறுது... ஒருக்கா யாழ்ப்பாணத்திற்கு வந்திட்டுப்போவன்..பேரன் பேத்தியையும் பாக்கோணும் போல இருக்கு....இப்படியான உரையாடல் ஒருபுறம் நடக்கும்....

வெளிநாட்டுச் சனம் வருது எண்டால் அதுவரை fridge க்குள் இருந்த நெல்லிக்கிறஷ் குசினி அலுமாரிக்குள் இடம்பெயர்ந்து போக அந்தச்சோடா ,இந்தச் சோடா எல்லாம் நெல்லிக்கிறஷ் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.....

 இப்ப கொஞ்சக்காலமா நல்லூர்த்திருவிழாவ வேடிக்கை பாக்குறதுக்கு எண்டு மாத்தயா, நங்கி, மல்லி,  வான் பிடிச்சு A9 றோட்டில ஒரு பனை உயரத்துக்கு புழுதி கிளப்பிக்கொண்டு வருவினம்.....

திருவிழாக்கு சாறி, அது, இது எடுக்கிறம் எண்டு பொம்பிளப்பிள்ளையள் ஒரு திருவிழா நடத்துவினம்...இந்தத்திருவிழாவில நியூ மாக்கட் ல கடை வைச்சிருக்கிறவன்  படுற பாடு தெனாலி படத்தில கமல் போல எனக்கு விசர் எண்டு சொல்லுற அளவுக்கு இருக்கும்....

இதெல்லாம் திருவிழாதொடங்குறதுக்கு முதல் நடக்கிறது...

திருவிழாதொடங்கினால்.....

8 மணி பள்ளிக்கூடத்துக்கு 8.15 க்கு போறவை கூட  6 மணிபூசைக்கு போறதுக்கு 4 மணிக்கு எழும்பி வெளிக்கிட்டு 5.45 க்கு முன் கோயில்ல நிப்பினம்...


மண்சட்டி, அலுமினியப்பாத்திரக் கடைக்காரனில இருந்து state bankers,private bankers ,share brokersவரை எல்லோரும் கோயில் வீதில தான்...

வழமையா தேர் தீர்த்தம் எண்டா நேரடி வர்ணனைகள றேடியோவில  கேக்கலாம்.....
.இப்ப 2 வருடமா கொழும்பில இருக்கிற வானொலி நிலையங்கள் நல்லூரில கலையகம் அமைச்சு நல்லூரிலிருந்து நேரடிஒலிபரப்பு செய்யிறதும் நடக்குது....


 பின்னேரம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுற பொம்பிளப் பிள்ளையள் 8, 9 மணிவரை  கோயில்ல நிக்கிறதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சாலும் கோயில் பிரதேசத்தை பத்து தரம் சுத்தி விட்டு சத்தமாக கதைச்சு கொண்டும்  பகிடிவிட்டுக்கொண்டும் 10, 11 மணிக்கு பிறகு வீட்ட வரும் அண்ணனையோ தம்பியையோ பாக்கும் பார்வையில் ஒரு வித எரிச்சல், பொறாமை, ஏக்கம்  மூண்டும் தெரியும்...

தேர் தீர்த்தம் எண்டால் இன்னும் சிலது நடக்கும்...

தன் கையைக் கொண்டு கைத்தொழில் செய்யும் சிலருக்கு தொழில்வாய்ப்பை வழங்கோணும் எண்டோ என்னவோ காற்றுக்கூட புக முடியாத அளவில வந்து குவியிற   சனத்துக்க, தேர்வடம் அளவுக்கு 10, 12 பவுணில தாலி, சங்கிலி போட்டுக்கொண்டு வாற எளிமையானவர்களையும் இங்க காணலாம்...


சனக்கூட்டத்துக்க சில தடிமாடுகள் இடிமாடுகளாகி .இடிக்கும் போதெல்லாம் பொம்பிளப்பிள்ளைகளின் கையில வைச்சிருக்கிற safety pin ன் மாற்றுப்பயன்பாடு என்ன எண்டு தெரிய வரும்..

முதல் முதலா வேட்டி  சாறி கட்டிக்கொண்டு  நடக்கிறவை இப்பத்தான் நடைபழகுற குழந்தை போல தத்தி தத்தி நடப்பினம்.... நடக்கத்தெரியாம கோயில் வீதியிலயே விழுந்து கும்பிடுறவையளும் இருக்கினம்.....


கந்தன் வள்ளியைக் காதலிச்சு முடிச்சதால  கோயில்ல  வைச்சு  line அடிக்க தொடங்கினவங்கள் தங்கட தெய்வீகக்காதல் எண்ட நினைப்பில திரியுறதும் நடக்கும்.....


நாத்திகம் கதைக்கிறவய கூட திருவிழாவில குடும்பத்தினரின்ர வாகனச்சாரதிகளாக காணலாம்....

வீடுகளில் பெரும்பாலும் கோயில் கொடியேற்றத்திலிருந்து 25 நாளும்  மச்சம் (அசைவம்) இல்லாமல் சைவ சமையலே நடக்கும் எண்டதால நீர்வேலி வாழைத்தோட்டக்காரர் பளை தென்னந்தோப்புக்காரர் உட்பட எல்லா விவசாயிகளுக்கும் உழைப்புக்கான பலனைக்கொடுக்கிறது இப்படிப்பட்ட கோயில் திருவிழாக்கள் தான்....

கடவுள் பக்தி என்பதைத்தாண்டி  7 மணிக்குப் பிறகு மணலில் கூட்டமாக இருந்து கதைக்கவும், பல நட்புக்களையும், உறவுகளையும் சந்தித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும், பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்,உறவுகள் நட்புக்களுடன் சேர்ந்து ஒரே நாளில் 3தடவைக்;கு மேல் ice cream குடிக்கிறத்துக்கும் சோளம்,, பஞ்சுமிட்டாய், தேன்முறுக்கு ,கரம் சுண்டல் சுவை பாக்குறதுக்கும்  விதம்விதமான பலூன், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிறதுக்கும் இப்படி இன்னும் பல விதமாக  உள்ளத்தால குழந்தையாகிறதுக்கும் இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை முறைகளில் இன்னும் மனிதனை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டிருப்பது நமது சமூகங்களைப் பொறுத்த அளவில்  இவ்வகையான திருவிழாக்கள் தான்....



யாழின்சாரல் சாருகா

Thursday, July 12, 2012

தோல்வியில் ஒரு காதல்

தோல்வி வலி தரும் வார்த்தை.ஆனால் அது திடமான உளவலிமையையும் தரும்.
தோல்வியின் பின்னரான பொழுதுகள் சிக்கலானவையாயினும் தெளிவான உறுதியான முடிவுகளை நோக்கிய பயணத்தின் சிறப்பான வழிகாட்டியாகவும் தோல்வி அமையும்.
எப்பொழுதெனில் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும் தோல்வியைக்கையாளவும் தெரிந்திருந்தால்......


தோல்வி பற்றிய நினைவோ, பயமோ வேண்டாம் என்று ஒரு சாராரும் வெற்றி தோல்வியை சமமாகவே மதிக்க  வேண்டும் என்று ஒரு சாராரும் கூறுவர்
என்னைக்கேட்டால் வெற்றியை விட தோல்வி ஒருபடி உயர்ந்ததே:
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும் தோல்வியைக்கையாளவும் தெரிந்திருந்தால்......


ஏன் தோற்றேன்?, என்னுடைய பலவீனம் என்ன?, இந்தத்தோல்வியிலிருந்து மீள வழி என்ன? இப்படியான கேள்விகளை தங்களுக்குள்ளேயே கேட்டு அதற்கான விடையைத்தேடுவதுனூடாக சுயஆராய்ச்சி செய்யும் சந்தர்ப்பத்தை தோல்வியானது  தோற்றவனுக்கு வழங்குகின்ற அதேவேளை, வெற்றி தோல்வியில் பங்களிக்கும் புறக்காரணிகளையும் தோல்வி அடையாளம் காட்டி நிற்கிறது....

தோல்விக்கு பின்னரான பொழுதுகள் விமர்சனங்கள், ஏளனங்கள், பரிதாபங்கள் போன்றவற்றை எதிர்கொள்வதிலேயே கழியும். விமர்சனங்கள் நம்மை வளப்படுத்தும் அதேவேளை ஏளனங்கள் தன்மானஉணர்வைத் தூண்டி விடுகின்றன.தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள தோல்வி எனும் வலி தரும் உளி அவசியமாகின்றது..


ஏதோவொரு சரிவின்போது தான் நமக்கு கைகொடுப்போர் யார், நம்முடைய சரிவில் கைகொட்டிச்சிரிப்போர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்...முகமூடி அணியும் இவ்வுலக மக்களைப்பற்றிய புரிதலையும் தெளிதலையும் தோல்வி தருகிறது.

வெற்றிகள் நம்மை உலகுக்குத்தெரியப்படுத்தும் அதேவேளை இவ்வுலகத்தைப்பற்றி தோல்வி நமக்கு அறியச்செய்கிறது...நம்மை உலகம் அறிவதற்கு முன் நாம் உலகத்தைப்பற்றி தெரிந்திருத்தல் என்பது சிறப்பானதே...


தோல்வியின் பாடங்கள்  எதிர்காலத்தில் நம்மைச்சூழவுள்ளோரினை சரியாக கணிப்பதிலும் கைகொடுக்கும் அதேவேளை, அடுத்தவர் நிலையில் நம்முடைய செயற்பாடு எப்படி இருக்கும் என்ற புதிய கேள்விகளையும் தோற்றுவிக்கின்றது.


எதிர்கால வெற்றிகளில் மிரளாமலும் தோல்விகளில் துவளாமலும் இருக்க முன்னைய தோல்வி தந்த பட்டறிவு உதவுகிறது.

தொடர்ச்சியான வெற்றிகளிற்குப்பின்னர் ஏற்படும் எதிர்பாராத தோல்வி தீவிரமான உளப்பிரச்சினையை ஏற்படுத்தி தோல்வியிலிருந்து மீளவிடாமல் செய்கின்றது...ஆழ்ந்து பார்த்தால் இப்படியான பிரச்சினைகளுக்கான காரணம் அவர்கள் வெற்றி தங்களுக்கு மட்டுமே உரியது என்றும் தோல்வி கேவலமானது என்றும்  நினைப்பது தான்...

விழாமலேயே இருப்பதை விட விழுந்து பின் எழுந்து ஓடி வென்றவனுடைய உள்ளத்தில்  உத்வேகம், தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும்.

இந்த உலகில் பல தோல்விகளைச் சந்தித்தவர்களே அதிசயிக்கத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்கள்...


முட்டாள் என்றும், கல்விகற்பதற்கு அருகதை இல்லாதவன் என்றும்  பாடசாலையில் திட்டி வீட்டிற்கு அனுப்ப்பட்ட ஒருவனால் தான் இன்றைய உலகு ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது... எண்ணிலடங்காத தோல்விகளைச் சந்தித்தவரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட விஞ்ஞானகண்டுபிடிப்புக்களுக்கு சொந்தமானவருமான அந்த ஒருவன் தோமஸ் அல்வா எடிசன்..; வெடிக்காத மின்குமிழைச்செய்யும் முயற்சியில் பதினேழாயிரம் மரங்களை பரிசோதித்து தோற்ற பின்னும் விடாமல் முயன்று தனக்குத் தேவையான லேடக்ஸ் எனும் பொருளைக் கண்டுபிடித்தார்.


இருபத்தொரு வயதில் வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து ஆரம்பித்து மாகாணசட்டசபைத்தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல் ,மக்கள்மன்றத்தேர்தல் என வரிசையாகத் தோற்றபின் 52 வயதில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் தான் அமெரிக்கஅதிபர் அப்ரகாம் லிங்கன்

முயற்சி செய்யாமல் இருப்பதைக்காட்டிலும் முயன்று தோற்பது மேலானதே...
வீழ்ச்சிக்குப்பின்னரான எழுச்சியிலுள்ள மகிழ்ச்சியை தோல்வி தான் அறிமுகம் செய்கிறது...
தோல்வி அவமானம் அல்ல தன்மானச்சுடரை ஏற்றி வைக்கும் வெகுமானம்...




மீண்டு வர..,
மீண்டும் எழ...,
சரிவுகளின் பின்னும் சரித்திரம் படைக்க...,
வேதனைகளைச் சாதனைகளாக மாற்றியமைக்க...
சொல்லித்தரும் தோல்வி மகத்தானதே
இவன் தோற்றவன் என்றோ, இவர்கள் தோற்றவர்கள் என்றோ பிறரை குறைவாக மதிப்பிடுவது தான் கேவலமானது..

தோல்வி தொடர்பாக மேதைகள்  கூறியவை

“Failure is simply the opportunity to begin again this time more intelligently..”
Hentry ford

“My reputation grows with every failure” George Bernard Shaw

“I have not failed. I have just found 10000 ways that won’t work”                                                Thomas.A. Edison

“Every adversity, every failure, every heartache carries with it seed on an equal or greater benefit.”
Napoleon hill
“Success builds character, failure reveals it.” Dave checkett
 

தோல்வியில் ஒரு காதல் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் காதல் தோல்வி பற்றி ஏதோ அலம்பல் அல்லது கவிதை எனும் பெயரில் புலம்பல் என்று எண்ணியிருந்தால் இப்பொழுது ஒரு தோல்வி உங்களுக்கு....

தலைப்பை பார்த்து உள்ளடக்கம் இது தான் என்று நீங்களாகவே முடிவு செய்வது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது என்ற செய்தியை இத்தோல்வி வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையுடன்....

யாழின்சாரல் சாருகா

Thursday, May 31, 2012

வாசித்தலை உயிர்மூச்சாய்....

;  இன்றிலிருந்து சரியாக 31 வருடங்களுக்கு முன் அதாவது 31.05.1981 அன்று நடந்த சம்பவம்(?) தொடர்பாக இப் பதிவை எழுதுகிறேன்.

நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு நூலகம் அது. குறிப்பிட்ட இன மக்கட்தொகுதியின் தனித்துவத்தையும், கலாசார பெருமைகளையும், அவர் தம் சீரிய வரலாற்றினையும் இவற்றிற்கும் மேலாகஅவர்களின் எதிர்கால இருப்பையும் 97ஆயிரம் புத்தகங்களுக்குள்ளும் ஓலைச்சுவடிகளுக்குள்ளும் நிறைத்து வைத்திருந்த நூலகம்.
 அந்நூலகத்துடன் தொடர்புடையதாக அறிவு, அனுபவம், வயது என மூன்றாலும் வேறுபட்ட
என் கற்பனை கதாபாத்திரங்கள் மூவர்...
 முதலாமவர் பத்து வயதுடைய சிறுமி நிலா.மேலே நான் குறிப்பிட்ட நூலகத்தின் சிறுவர்பகுதியில் பாடசாலைநேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அவளைக் காணலாம்.
தாய் மடியாய் அவளைத்தாங்கி பல நீதிக்கதைகளையும், நன்னெறிகளையும் ஊட்டிய நூலகத்திற்கு அன்றும் (31.05.1981) சென்ற நிலா ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறாள்.
கதையின் நீளம் காரணமாக குழந்தையால் வாசித்து முடிக்க முடியவில்லை...நாளை வாசிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வீடு சென்ற நிலாவிற்கு அடுத்த நாளின் விடியல் அதாவது 01.06.1981 ம் திகதி அவளுக்கு வைத்திருந்த செய்தி என்ன?

 இனி இரண்டாமவர்
பல்கலைக்கழக புதுமுக மாணவன் சேரன்.குறிப்பிட்ட நூலகத்திலிருந்து அவனது ஊர் தொலைவில் அமைந்திருந்தது.கிட்டத்தட்ட2 மணி நேர துவிச்சக்கர வண்டிப்பயணம்.
தனது பட்டபடிப்பின் தேவைக்காகவும் பொழுது போக்குக்காகவும் மேற்சொன்ன நூலகத்தின் அங்கத்தவராகும் ஆசையுடன் காலை 9மணிக்கு புறப்படும் சேரன் 11.15 மணியளவில் நூலகத்தை அடைகிறான்.நூலகரிடம் அங்கத்தவராவதற்குப் இணைந்துகொள்ளப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய விண்;ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் சேரன்,விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்த பின் தன்னுடைய கிராமசேவகரிடம்சென்று விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது நேரம் மாலை 5 மணி.கிட்டத்தட்ட ஒரு நாள் அலைந்து, திரிந்து நூலக அங்கத்தவராகும் கனவுடன் உறங்கச்சென்ற சேரனுக்கு மறுநாள் தெரிய வந்த விடயம்......????



மூன்றாமவர் ஒரு ஆசிரியரும். எழுத்தாளருமான முருகன்.குறிப்பிட்ட நூலகத்தில் 25 வருடங்களுக்கும் மேலாக அங்கத்தவராக இருக்கும் முருகன் நூலகநூல்களின் உதவியுடன் மாணவர்களுக்குத் தேவையான பல நூல்களை எழுதி வெளியிட்டு வந்துள்ளார்.தன்னுடைய புதிய முயற்சியாக இலங்கையில் தமிழர் எனும் பெயரில் ஒரு நூல் வெளியிடும் ஆவலில் நூலகத்தின் சேகரிப்பிலிருந்த ஓலைச்சுவடிகள், ஆவணங்களிலிருந்து தனக்குத் தேவையான விபரங்களைச் சேகரிக்கஆரம்பித்திருந்தார்.ஆனி மாத முதலாம் நாளின் புலர்வு(01.06.1981) அவருக்குப் புலப்படுத்தியது என்ன...?????



 வாசித்தலை மூச்சுக்காற்றாய் நேசித்த தமிழர் தலையில் இடி விழுத்திய அந்தச்செய்தி இதுதான்....

1981 வைகாசி மாத 31ம்திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்குப்பின் நூலகம் எரியூட்டப்பட்டு விட்டது.
நூலகத்தில் மீந்திருப்பது சாம்பலும் கருமை படிந்த சுவர்களும் மட்டுமே...
மேலே குறிப்பிடப்பட்ட மூவராய் அல்லது மூவரில் ஒருவராயேனும் ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் வாழ்ந்து பாருங்கள்....

யாழ் நூலகம் - வரலாற்றிலிருந்து....


1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதல் நூலகம் உருவாக்கப்பட்டது.ஆனால் அந்நூலகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை..


1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள்; திரட்டிய 184 ரூபா 22சதம் தான் பொது நூலகம் அமைப்பதற்கான மூலதனமாய் அமைந்தது.



1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும் சிறியதொரு பொது நூலகம்
ஆரம்பிக்கப்பட்டது.
1-1-1935 இல் போதிய வசதியின்மை காரணமாக வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.


1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.


1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் திகதி கட்டிட அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.


11.10.59இல் பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு; அதி விமரிசையாக யாழ் முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூல்கள் வந்துசேர்ந்தன. புத்தக ஆர்வலர்கள் சேமித்துவைத்திருந்த புத்தகங்களும் பத்திரிகைப் பிரதிகளும் யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டன.


1981.05.31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தகக் கடைகள,இலங்கையில் முதல் தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமைக்குரிய ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாணம் நாச்சியார் கோயில்,நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு  இறுதியில்; திராவிடக்கலையம்சம் பொருந்திய மொத்தம் 15,910 சதுர அடிகளைக் கொண்ட யாழ் பொது நூலகம் கிடைத்தற்கரிய மீளப்பெற முடியாத 97ஆயிரம் புத்தகங்களையும் மருத்துவ சோதிட ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த தென்னாசியாவின் முதல்தரமானதும், மிகப்பெரியதுமான யாழ்நூலகமும் காடையர்களின் தீக்கிரையாகித் தீய்ந்து போனது. நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்க்ளைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தி அடித்துவிரட்டியது மதிகெட்ட காடைக்கூட்டம்....
கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன பொக்கிசங்களில் அதிமுக்கியமானவை.


 

அழுகை,ஆற்றாமை, ஆவேசம், விரக்தி இப்படி ஏதோ ஒன்றின் ஆளுகைக்குள் தானே அப்போது வாழ்ந்த மக்கள் இருந்திருப்பார்கள்.


ஆனால்.....


பேரறிஞனும்,பன்மொழிப்புலவனும், ஆய்வாளனுமாகிய வணக்கத்திற்குரிய சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்); நூலகம் எரிந்த செய்தியைத்தாங்கிக் கொள்ள முடியாதவராய் தம்முயிரை நீத்தார்.


நூலக ஊழியரும், நாடக கலைஞருமான பற்குணம் என்பவர் 3 நாட்களாக மனநிலை குழம்பிய நிலையில் இருந்தார்





 வழமையாக நான் செல்லும் நூலகம் நூற்றில் ஒரு வாய்ப்பாக எப்பொழுதாவது மூடியிருக்கும் போது சாத்தப்பட்ட அந்தக்கதவுகள் என் மனதில் ஏற்படுத்தும் வெறுமையை நினைத்துப் பார்க்கிறேன்......
மூடிய கதவு நாளையோ மறு நாளோ திறக்கும்.. ஆனால் எரிந்து போனால்......



இப்போது போன்று இணைய வசதி இல்லாத அந்தக் காலத்தில் அறிவு விருத்திக்கான புத்தகங்களைத்தேடி அப்போதிருந்த மாணவர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எவ்வளவு அலைந்திருப்பார்கள்???
இத்தனைக்கும் மேலாக இவ் வெறியாட்டத்தை நிகழ்த்த ஆணையிட்ட அதிகாரவர்க்கத்திற்கும், நிகழக்கூடாத கொடூரத்தை நிகழ்த்தி முடித்த அடிவருடிகளுக்கும் கிடைத்த தண்டனை பரிசுகளும் பதவி உயர்வுகளுமே....



யாழ்ப்பாண நூல் நிலையம் - ஒரு சாட்சியம்
அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மேல் நிற்பது போன்ற உணர்ச்சி மேலிட்டது.


'எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?' கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ் பொது நூலகர் திருமதி ஆர். நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது.


நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும், ஏன், உலக நாடுகள் எங்ஙனுமிருந்தும், ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.


யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.


முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைத்த சூன்யமாகி விட்டிருந்தது. இதயமற்றோர் கடந்த ஜூன் மாதம் முதல் நாளிரவு மூட்டிய தீயினால்!


இத்தகு அழிவுகளைப்பற்றி வரலாற்று ஏடுகளிலே வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்டதில்லை. பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அலெக்ஸாந்திரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணம். எமது நாட்டிலும் பதின்மூன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் பொலனறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட நூலகங்களும் என் எண்ணத்தைத் தொட்டன.


ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்களைப் போல் காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூடாக அவ்வேளை திடுமென வீசிய காற்று, என்னை நூலகர் வழங்கிக் கொண்டிருந்த விளக்கத்திற்கு மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து போன நூல்களின் சாம்பலை அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது......


இப்படியே நீன்டு செல்லும் இச்சாட்சியத்தை 19-7-1981 ஆம் ஆண்டு வீரகேசரியில் எழுதியவர் எஸ். எம். கமாலுதீன் அவர்கள். பின்னர் இக்கட்டுரை மூதறிஞர் க. சி. குலரத்தினம் அவர்களின் யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம் (1997) என்ற நூலில் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டது.





ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
                                  -விவேகானந்தர்


'மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும், மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப்போக்கி, சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர் தரு சுவடிச் சாலை,
புனித முற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.'
                                               -பாரதிதாசன்



சரித்திரம் எரிந்து
இந்த 31ம் திகதியுடன்
31 ஆண்டுகள் நிறைவு


இதயம் இடம்பெயர்ந்து
இமயம் குடிவந்தது போல்
கனக்கிறது நெஞ்சம்....
வாசித்தலை உயிர்மூச்சாய்
நேசித்ததற்கு கிடைத்த தண்டனையோ??


இப்படி
விடைகள் இல்லா வினாக்கள்
ஓராயிரம்...நம்மிடம்..


இன்று கட்டிடத்தின் அளவால் மட்டும் பெரிதாய் யாழ்ப்பாண நூல் நிலையம....






; யாழ் நூலக எரிப்பு தொடர்பாக இணையத்தில 'burning memories of jaffna library' என தேடினால் அது தொடர்பான காணொளிகளைக் காணலாம்.

யாழின்சாரல் சாருகா

Tuesday, May 22, 2012

யாழ்ப்பாணம்


பதிவை வாசிக்க வந்திருக்கும் உள்ளங்களுக்கு வணக்கமும் நன்றியும்.
எனது சொந்த வலைப்பூவில் முதலாவது பதிவாக யாழ்ப்பாணம் இருந்தபோதிலும் உண்மையில் இது என்னுடைய இரண்டாவது பதிவாகும்.இதற்கு முன்னர் நட்பு வட்டாரத்திற்கான     
sweetsweetygroup.blogspot.com ல் 21.02.2012 அன்று 'உயிர் மூச்சின் இறுதி நிமிடங்களிலும் இனிக்கும் தருணங்கள்' எனும் தலைப்பில் தூக்கத்துடனும் அடிக்கடி தொடர்பு விட்டுப்போகும் இணையத்துடனும் போராடி எழுதிய பதிவே என்னுடைய முதலாவது பதிவாகும்..அப்பதிவிற்கான இணைப்பு இதோ

'நண்பன்' விஜய் பாணியில் எளிமையாக சொல்வதானால் இது என்னுடைய இரண்டாவது பதிவு என்பதால் தவறுகளிருந்தால் பொறுத்துக்கொள்ளும்படியும் திருத்திக்கொள்ளவேண்டிய பகுதிகளை சுட்டிக்காட்டும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணம்

என்றென்றும் என்னால் விரும்பக் கூடிய பதிவாக இருக்கவேன்டும் என்பதற்காக  யாழ்ப்பாணம் பற்றி இப்பதிவை இடுகிறேன்.யாழ்மண்ணை நேசிக்கும் ஒருவரால் தாய்க்கு நிகரான தாய்மண் பற்றி ஒரு பதிவு என்ன ஓராயிரம் பதிவு எழுதலாம்.

பரந்து விரிந்த இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமையப்பெற்ற, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவின் வடபகுதியில் அமைந்துள்ளது யாழ்ப்பாணம்.மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணக்குடாநாடு எனவும்,சுருக்கமாக யாழ் எனவும் அறியப்படுகிறது.
இலங்கையை ஒரு மனித உடலோடு ஒப்பிட்டால் மிக முக்கியமான பகுதியான தலைப்பகுதியில் யாழ்ப்பாணம் உள்ளது.



இனிமையாக யாழ் மீட்டிய இசைக் கலைஞனுக்கு மன்னன் பரிசளித்த மணல் திட்டுக்களே யாழ்ப்பாணம் என்பது ஐதீகம். யாழ் வரலரற்றை  18ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயில்வாகனப்புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அறிவு,வீரம்,கலை, கலாசாரம், விருந்தோம்பல் என மக்களின் தனித்தன்மையால்  சர்வதேச அளவில் அறியப்பட்ட இடமிது.
சோழக்கொடி ஏந்தி புறநானூறு படைத்த யாழ் மண்ணிற்கு தமிழர் தம் வரலாற்றில் தனித்துவமான இடம் என்றுமேயுண்டு.
கனடாவின் ரொறன்ரோ நகரம் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுவதனூடாக புலம்பெயர்ந்த யாழ்மக்களின் செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம்...அட அவ்வளவு எதுக்குங்க?சிவாஜி படத்தில் ரஜினிக்கு பெண் தேடி சின்னக்கலைவாணர் யாழ்ப்பாணம் புறப்பட்ட கதை தெரியும் தானே?? (கொழும்பு வரை வந்து விட்டு இலங்கை அரசின் பாதுகாப்புக் கெடுபிடிகளால் வந்தவழியே திரும்பி விட்டார் என்பது அவருக்கும் இலங்கை அரசிற்கும் மட்டுமே தெரிந்த மெய்)

அறிமுகம் போதும்...இனி யாழ்ப்பாணத்திற்குள் காலடி
எடுத்துவைப்போம்....யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி இலங்கையின் எந்த பாகத்திற்கும் முக்கியமாக தமிழர் பிரதேசங்களுக்கு தடை இல்லாமல் சென்று வர உங்கள் கையில் ஒன்று கட்டாயம் வேண்டும்.நிச்சயமாக பணத்தை நான் குறிப்பிடவில்லை..அது தான்...அதே தான்.. உள்நாட்டவர் என்றால் அடையாள அட்டை,வெளிநாட்டவர் என்றால் கடவுச்சீட்டு. (இலங்கையின் பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் விதிவிலக்கு)



A9 எனப்படும் யாழ்-கண்டி வீதியூடாக தரைமார்க்கமாகவும்,கடல் வழி மூலமாக காங்கேசன் துறை ஊடாகவும் விமானம் மூலம் பலாலி விமானத்தளத்தை வந்தடைவதன் மூலமும் யாழ்ப்பாணத்திற்குள் நுழையலாம். 1990களில் நிறுத்தப்பட்ட புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது....

இனி யாழ்ப்பாணத்தின்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம்..

யாழ் நூலகம்
கல்வியே நிலையான செல்வம் என்ற வலுவான கருத்தைக் கொண்ட யாழ் மக்களின் அரிய சொத்தாக, 1981ம் ஆண்டு சிங்கள காடையர்களால் எரிக்கப்படும் வரை கிடைத்தற்கரிய ஒரு இலட்சம் புத்தகங்களுடன் தென்னாசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்தது இந்நூலகம்.

சுப்பிரமணியம் பூங்கா
யாழ் நூலகத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் இப்பூங்கா குளிர்மை தரும் பல மரங்களைக் கொண்டதாகவும், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பகுதி கொண்டதாகவும் அமைந்திருக்கின்றது.அடடா சொல்ல மறந்து விட்டேனே...காதலர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.



யாழ் கோட்டை
போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டதும், பின்னர் ஒல்லாந்தரால் மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டதும்,இலங்கையின் இரண்டாவது பெரிய கோட்டையுமாக யாழ் கோட்டை அமைந்துள்ளது.இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இக்கோட்டையை  பொதுமக்கள் பார்வையிட தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.





 நல்லூர் முருகன் கோவில்
ஆகம முறைப்படி அல்லாமல் அமைந்த,இந்துக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்று. இங்கு அருள்பாலிக்கும் கந்தன் அலங்கார கந்தன் என பக்தர்களால் அழைக்கப்படுகிறான்.பிற ஆலயங்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் ஒன்று இவ்வாலயத்தில் உண்டு. எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாத நேர ஒழுங்கு (punctuality)இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.உரியநேரத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் பூஜைமற்றும் ஏனைய வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. 25நாட்கள் நடைபெறும் இக்கோயில் திருவிழாவிற்கு இலங்கையின் ஏனையபாகங்களிலிருந்தும்,வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் வருகை தருகிறார்கள்.

சங்கிலியன் அரண்மனை
சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.இம் மன்னன் வசித்த  அரண்மனையின் முகப்பு மட்டுமே தற்போது நல்லூரில் எஞ்சியிருக்கின்றது.போர்த்துக்கேய ஒல்லாந்த படையெடுப்புக்களாலும்,யுத்தத்தாலும்,முறையான பராமரிப்பின்மையாலும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.


மந்திரி மனை
சங்கிலிய மன்னனின் மந்திரி வாழ்ந்த மனை எனபதால் மந்திரி மனை என்றே அழைக்கப்படுகிறது..அரியாலையில் அமைந்திருக்கும் இம் மனை சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடமாக காணப்படுகிறது.

நிலாவரைக்கிணறு
இராச வீதி நவக்கிரியில் அமைந்துள்ள இக்கிணற்றின் ஆழம் இதுவரை அறியப்படவில்லை. நிலா வரையான தூரத்தினை ஆழமாகக் கொண்ட கிணறு என்ற பொருளில் 'நிலாவரைக் கிணறு' என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இராமன் தாகத்தின் கொடுமையால் தன்னுடைய அம்பினால் நிலத்தில் குத்தியபோது நீர் ஆனது முடிவில்லாமல் சீறிப்பாய்ந்ததாக கூறப்படுகின்றது

மாருதப்புரவல்லி குதிரை முகம் நீங்கப்பெற்ற மாவிட்டபுரம் கோவில்,பொன்னியின் செல்வனில் பூங்குழலி படகுவிட்ட தொண்டமனாற்றுச் செல்வச்சந்நதி ஆலயம்,மணற்காடு, சாட்டிகடற்கரை, நல்லூர்அருங்காட்சியகம் இப்படி யாழ் மண்ணில் ரசித்து வசிக்க இடம் கோடி உண்டு. யாழ் சாரலின் துளிகளில் யாழ்ப்பாண பயணம் தொடரும்...

மறுபிறவி உண்டென்றால்
மறுபடியும் யாழில் பிறக்கவேண்டும்....
இறந்த பின்னும் இம்மண்ணோடு
மண்ணாய்க் கலக்கவேண்டும்..
    
யாழின்சாரல் சாருகா